Friday, November 03, 2006

ஆசிவகம் 1

ஆசிவகம்

ஆசிவகத்தை தோற்றுவித்தவர் "மற்கலி கோசர்" என்பார். இவர் மகாவீரர், புத்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சில காலம் மகாவீரரின் சீடராக இருந்தவர். பின், மகாவீரரிடம் கருத்து வேறுபாடு* காரணமாக தனியாகப் பிரிந்து ஆசிவகக் கோட்பாட்டை உருவாக்கினார்.

(* பகவதிச்சூத்திரம் என்னும் ஜைன (சுவேதாம்பர பிரிவு) நூலில் கூறப்பட்டு இருக்கிறது.)

ஆசிவகம் சிரமண மதங்களின் ஒரு பிரிவாகக் கருதப்படுகிறது. அதென்ன சிரமண மதங்கள் என்கிறீர்களா? அக்காலத்தில் வழங்கிய மதங்களை ஒருவாறு இரு பிரிவாகப் பிரித்துவிடலாம். ஒன்று வேதத்தை ஏற்றுக் கொண்ட மதங்கள் - வைதிக மதங்கள் என்றும், மற்றொன்று வேதத்தை மறுத்த மதங்கள் - சிரமண மதங்கள் என்றும் பிரிக்கலாம். இப்பகுப்பு முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது.

ஆசிவகம் சிரமண மதங்களில் ஒரு பிரிவாகக் கருதப்பட்டாலும். அது கோட்பாட்டில் வேறுப்பட்டே இருந்தது. சிரமண மதங்களில் காலத்தால் வெகு பழமையானது சமணமே (ஜைனம்). சமண மதத்திலிருந்தே மற்ற மதங்கள் பிறந்ததனால் அவைகள் (பெளத்தம் மற்றும் ஆசிவகம்) சிரமண மதங்கள் எனப்பட்டன.

சிரமண மதங்கள் ஒரே பிரிவாக இருந்தாலும், அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டே வந்திருக்கின்றன. சமணர்கள், ஆசிவகர்களை "ஏகாந்தவாதிகள்" என்றும், பெளத்தர்களை "சூன்யவாதிகள்" என்றும் அழைத்தது. பெளத்தர்கள், ஆசிவகர்களை "மற்கலியர்கள்" என்றும் சமணர்களை " னிகண்டவாதிகள்" என்றும் அழைத்தது.

"மஜ்ஜிமினிகாயா" என்ற பெளத்த னூல் சமணர்களையும், ஆசிவகர்களையும் மிக தெளிவாக பிரித்துக் காட்டுகிறது. ஆனால், பிற்காலத்து னூலாசிரியர்கள் சமணர்களுக்கும், ஆசிவகர்களுக்கும் வேறுபாடு (வித்தியாசம்) தெரியாமல் இருவரும் ஒரே பிரிவினர்கள் என்று எழுதிப் போந்தார்கள். இதற்கு மேல் நாட்டறிஞர்களும் விதிவிலக்கல்ல. "சிவஞான சித்தி" என்ற சைவ நூலிலும் இந்த வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றே என்று எழுதியிருக்கிறார்கள். மேல் நாட்டு அறிஞரான டாக்டர். ஏர்னல் என்பார் ஒரு கட்டுரையில் இருவரும் ஒருவரே என்று எழுதியிருக்கிறார். ஆனால், யாரும் தங்களின் கருத்துக்கு சான்று தரவில்லை. ஒரு வேளை இரண்டு பிரிவினரும் அம்மணமாக இருந்ததினால் வெளித் தோற்றத்தை வைத்து இருவரும் ஒருவரே என்றனர் போலும்.

தோற்றத்தில் இருவரும் ஒரே கோலமாக இருந்தாலும் கோட்பாட்டில் இருவரும் நேர் எதிர்.

பெளத்தர்கள், ஆசிவகர்களை மிக கண்டித்திருக்கிறார்கள். ஏன்! புத்தரே அவர்களை கண்டித்திருக்கிறார். புத்தர், " அவர் (மற்கலி) துறவறம் ஏற்றவர்கள், பெண்டிரிடம் உடல்வுறவுக் கொள்ளலாம்" என்று போதித்தவர், ஆதலால் அவர்களை விட்டு விலகி இருங்கள்" என்று தன்னுடைய சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஆசிவகர்கள் "சமணர்கள்" என்று அழைக்கப்பட்டார்களா? ஏன் இந்த கேள்வி என்றால்? இப்போதெல்லாம் பல அறிஞர்கள் சமணர்கள் (ஜைனர்கள்) வாழ்ந்த குகைகளை ஆசிவகர்கள் வாழ்ந்த குகைகள் என்று புனைந்துரைத்து வருகிறார்கள்.

ஏன்?

தொடரும்.............. ;-)


இரா.பானுகுமார்,
சென்னை.

2 comments:

பங்காளி... said...

வலையுலகில் உங்களின் இந்த முயற்சி தனித்துவமானதும்...மேன்மையானதுமென்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் சமணம் என்பது முற்றிலுமாய் மறக்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் அதுபற்றிய தகவல்களை வரும் சந்ததியினருக்கு பதிந்து வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...எல்லாருக்கும் பொதுவான இறைவன் தங்களின் முயற்சி வெற்றியடைய தேவையான ஆற்றலையும் அருளையும் வழங்க வேண்டிக்கொள்கிறேன்.

அன்பன்
பங்காளி

கோவி.கண்ணன் [GK] said...

நல்ல தமிழ் தமிழில் சுவைப்பட எழுதுகிறீர்கள் ஐயா ! பாராட்டுக்கள் !